காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காதலியார் சம்மளங்குள பகுதியில் காணப்படும் கற்குவாரி தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் இன்று (23) குறித்த கற்குவாரிக்கான களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி தி.பிரம்மியா தலைமையில் குறித்த களவிஜயம் நடைபெற்றதுடன், குறித்த இடத்திற்கு வருகைதந்த பொதுமக்களால் தமது வீடுகளில் வெடிப்புகள் ஏற்படுவதாகவும், கிணற்று நீர் வற்றுவதால் விவசாய நடவடிக்கை பாதிப்படைவதாகவும், கற்குவாரி கிடங்கு மூடாமையினால் தமது கால்டநடைகள் அதில் விழுந்து பரிதாபமாக இறக்கின்றது எனவும், கிணற்று கட்டுகளில் வெடிப்புகள் ஏற்படுகிறது என பல்வேறு விடையங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
குறித்த கற்குவாரி 2018 ஆம் ஆண்டு அமைத்து பாறைகளை வெடிவைத்து தகர்த்து அழிவடையச்செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித்த கற்குவாரி அமைக்கப்பட்டதால் ஏற்படும் அதிர்வுகளாலும், தூசியினாலும் மூச்சுத்தினறல் நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும், கற்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்ததுடன் குறித்த கற்குவாரி மீண்டும் அமைப்பதற்கு எச் சந்தர்பத்திலும் அனுமதி வழங்கக்கூடாது எனவும் கிராம மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த களவிஜயத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி தி.பிரம்மியா, புவிச் சரிதவியல் அளவை சுரங்கங்கள், நீரியல் வழச்சபை, வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, காதலியார் சம்மளங்குள கிராம அலுவலர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் குறித்த கற்குவாரிகளால் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் வீடுகள் மற்றும் கிணறுகளை ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் காதலியார் சம்மளங்குள கிராம அலுவர் நேரடியாக பார்வையிட்டதுடன், தமது களவிஜயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கையிடுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







Comments
Post a Comment