ஒட்டுசுட்டான் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரைச் சந்தித்தார் - ரவிகரன் எம்.பி
விவசாயிகளின் பாதிப்புக்களுக்கான தீர்வு மற்றும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக கலந்துரையாடல்.
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும், ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜரட்ணம் சுகந்தன் ஆகியோருக்கிடையில் நேற்றயதினம் (12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவில் கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட குளங்களின் சீரமைப்பு பணிகளின் நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரால் அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் கேட்டறியப்பட்டது.
அதேவேளை கூழாமுறிப்புக் குளத்தின் வாய்க்கால் சீரின்மையால், குளத்திலிருந்து நீர் திறந்துவிடுகின்ற சந்தர்ப்பங்களில், நீர் குடியிருப்புக்குள் உட்புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள விவசாயிகளுக்கு யானைவேலி வழங்குவது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டதுடன், கூழாமுறிப்பு குளத்தின்கீழ் காணப்படும் கீழ்வெளிக்குச்செல்லும் கமவீதி உள்ளிட்ட, ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவின்கீழ் காணப்படும் பாதிக்கப்பட்ட கமவீதிகளைச் சீர்செய்வதுகுறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்து.
இந்நிலையில் ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவில் காட்டுயானைகளால் பாதிப்பினை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விரைவில் யானை வேலிக்குரிய பொருட்கள் வழங்கப்படுமெனவும், கூழாமுறிப்பு குளத்தின் நீர் குடியிருப்பிற்குள் உட்புகுவதைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அபிவிருத்தி உத்தியோகத்தரால் இதன்போது பதில் வழங்கப்பட்டிருந்தது.
மேலும் வெள்ள அனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த குளங்களை சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், ஒட்டுசுட்டான் கமநல சேவைநிலையப் பிரிவில் நாற்பதிற்கும் மேற்பட்ட கமவீதிகள் சீரின்றிக்காணப்படுவதால் விவசாயிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகத் தெரிவித்த அபிவிருத்தி உத்தியோகத்தர், குறித்த கமவீதிகளை சீரமைக்க பாரியளவிலான நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



Comments
Post a Comment