போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு தப்பியோட்டம் - யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவம்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போதனா வைத்தியசாலைக்கு இன்று (14) அதிகாலை 1.40 மணியளவில் நிறை போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 24ஆம் இலக்க விடுதியில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது.
அதன் போது, தாதிய உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களுடன் முரன்பாடு, தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதுடன் விடுதியில் சிகிச்சைபெற்றுவரும் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.
அதனை அடுத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற போது, தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை பயன்படுத்தி அச்சுறுத்தியுள்ளார்.
அதனை அடுத்து அவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை ஒரு உத்தியோகத்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில் தாக்குதலை நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபப்ட்டுள்ள நிலையில் இச்சம்பவத்தால் தாதிய உத்தியோகஸ்தர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment