திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் தொடர்பான கள விஜயம் கின்னியாவில்.
திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் தொடர்பான கள விஜயம்.
கௌரவ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, கிண்ணியாவில் அமைக்கப்பட்டு வரும் திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் பணிகள் தொடர்பாக நேற்று (09) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது போது சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டு, தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் மீதமுள்ள பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் பகல் நேர பராமரிப்பு நிலையம் திறக்கப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், நிர்வாகக் கட்டமைப்பு, சேவை வழங்கல் முறைமை மற்றும் செயல்பாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபருடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
அத்துடன், நிலையத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய பணிகள், சமூக சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் அளவுத் திட்டங்களுடன் கூடிய விளக்கமாக திணைக்கள பணிப்பாளரும் நாவின்ன நிலையத்தின் பொறுப்பதிகாரிகளும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெளிவுபடுத்தினர்.
இதனுடன், இக் கள விஜயத்தின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கிலும் பசுமைச் சூழலை மேம்படுத்தும் வகையிலும் மா மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பொறியியலாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இணைக்கப்பட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




Comments
Post a Comment