வவுனியாவில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் - சத்தியலிங்கம் எம்பி தெரிவிப்பு.
வவுனியா மாவட்டத்தில் நீண்டகாலமாக இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் வீதிகளை திறக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று (7)ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி படைத்தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆலோசனைக்குழு கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்காணிகள், பாதுகாப்பு வலயத்தில் மூடப்பட்டுள்ள வீதிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற கூட்டத்திலும் அதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
முதற்கட்டமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்றுமுறிப்பு தச்சங்குளம் பிரதான வீதிக்கு பதிலாக நோத்கேற்வே ஹோட்டலிற்கு பக்கத்தில் செல்லும் வீதியை மக்கள் பயன்படுத்தக்கூடியதாக புனரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் கனகராயன்குளத்தில் 561 பிரிகேட் முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள பொதுக்காணிகள், மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Post a Comment