எமது நெல்லை எமது மாகாணத்திலேயே அரிசியாக்கி விநியோகிப்பதற்குத் தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை ஆலைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் - ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல், வேறு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அரிசியாக மாற்றப்பட்டு மீண்டும் எமது மாகாணத்துக்கே விற்பனைக்கு வருகின்றது. இதனால் எமது விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையை மாற்றியமைத்து, எமது நெல்லை எமது மாகாணத்திலேயே அரிசியாக்கி விநியோகிப்பதற்குத் தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை ஆலைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திலுள்ள தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள், அரச மற்றும் தனியார் வங்கிப் பிராந்திய முகாமையாளர்கள் ஆகியோருடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (06) நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது:
எமது மாகாணத்தின் தேவைக்கு மேலதிகமாகவே நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. உபரியான நெல்லை வெளியே அனுப்புவதில் தவறில்லை. ஆனால் எமது மக்களின் தேவைக்கான நெல்லையும் வெளியே அனுப்பிவிட்டு அதையே மீண்டும் அரிசியாக அதிக விலைக்கு வாங்குவது ஆரோக்கியமானதல்ல. உள்ளூர் அரிசி ஆலை உரிமையாளர்களுக்குப் போதிய கடன் வசதிகளை வழங்கி அவர்கள் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்யவும் அதனை இங்கேயே அரிசியாக மாற்றவும் நாம் முயற்சிக்கின்றோம் என்றார்.
விவசாயிகள் நெல்லை அறுவடை செய்யும் காலப்பகுதியிலேயே அரிசி ஆலை உரிமையாளர்களுக்குப் போதியளவு பணம் தேவைப்படுகின்றது. எனினும், அக்காலப்பகுதியில் வங்கிக் கடன்கள் கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக ஆலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர். இதனைக் கருத்திற்கொண்டு, அடுத்த போகத்திலிருந்தாவது உரிய காலத்தில் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
அரிசி ஆலைகளுக்குப் போதியளவு உலர்த்திகள் இல்லாமை பெரும் குறைப்பாடாக உள்ளது. உலர்த்திகளைக் கொள்வனவு செய்வதற்கு வங்கிகள் ஊடாக வழங்கக்கூடிய கடன் சலுகைகள் தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள உலர்த்திகள் மற்றும் களஞ்சிய வசதிகள் தொடர்பான தரவுகளைத் திரட்டி எதிர்காலத் தேவைகளைத் திட்டமிடவும் முடிவு செய்யப்பட்டது.
விவசாயிகள் உரிய பருவ காலத்திற்கு முன்னரே நெல்லை அறுவடை செய்வதால் அரிசி ஆலை உரிமையாளர்கள் தரம் சார்ந்த சவால்களை எதிர்கொள்கின்றனர். எனவே முற்றிய நிலையில் நெல்லை அறுவடை செய்வதன் நன்மைகள் குறித்தும் நவீன நெல் நடுகை முறைகள் குறித்தும் விவசாயிகளுக்குத் தெளிவூட்டல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர், அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக்குழு உறுப்பினர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தலைமையிலான குழுவினரும் கலந்துகொண்டனர்.

Comments
Post a Comment