வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மகத்தான வரவேற்பு



வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மகத்தான வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO LAM) அவர்களை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பொலிஸ் குதிரைப்படைப் பிரிவினரின் மரியாதையுடன் ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் அவர்களை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது. இதன் போது முழுமையான அரச கௌரவத்துடன் மரியாதை வேட்டுக்கள்  தீர்க்கப்பட்டு வியட்நாம் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் முப்படையினரின் கௌரவ மரியாதையை ஏற்றுக்கொண்டதன் பின்னர், வியட்நாம் - இலங்கை அரச பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் உத்தியோகபூர்வ புகைப்படம் பிடிக்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டனர்.  

இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வுபெற்ற), வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உள்ளிட்ட இரு நாடுகளினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2026-05-08

Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.